கோட்டாக்கு ஒத்துழைப்பு வழங்கியதன் சாபத்தை தற்போது எதிர்கொள்கின்றோம்-ஆனந்த தேரர் ஆதங்கம்!

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதன் சாபத்தை தற்போது எதிர்கொள்வதாக அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியால் அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்கொண்டு செல்ல முடியாது என்பது உறுதியாகி விட்டது எனவும் அவர் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,

சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கை மக்கள் என்றும் இல்லாதவாறு மிக மோசமான அவல நிலையினை தற்போது எதிர்க்கொண்டுள்ளார்கள். பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

ஆடம்பர வாழ்க்கையினை மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆடம்பர வாழ்க்கையல்ல தற்போது ஒருவேளை உணவை பெற்றுக் கொள்வது கூட பெரும் போராட்டமாக உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கினோம் என்பது உண்மை, அதனை மறுக்கவில்லை.

அதன் சாபத்தை தற்போது எதிர்க்கொள்கிறோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகம் தொடர்பில் இதுவரை நாம் எதனையும் குறிப்பிடவில்லை. தற்போது குறிப்பிடுவதற்கான காலம் உதயமாகியுள்ளது. ஜனாதிபதியால் அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்கொண்டு செல்ல முடியாது என்பது உறுதியாகி விட்டது.

இலங்கை மக்கள் உணவிற்காக போராடும் நிலையும், பெற்ற பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத நிலையில் பிள்ளையினை தாய் ஆற்றில் எறியும் நிலைமையும் இலங்கை வரலாற்றில் இதுவரை தோற்றம் பெறவில்லை. இன்று செல்வந்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், ஏழ்மையில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஜனாதிபதி பிற நாடுகளிடம் யாசகம் பெற்றாவது நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும். ஏனெனில் குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் அதற்கான பிரதிபலனை பெற வேண்டும். மிகவும் மனவேதனையுடன் உள்ளோம். நாட்டின் தற்போதைய நிலைமைக்கு தீர்வு காணாவிடின் நாட்டின் எதிர்காலம் முழுமையாக இல்லாதொழியும்.

பாரிய எதிர்பார்ப்பிற்கு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். மக்களின் எதிர்பார்ப்பு முழுமையாக இல்லாமல் போயுள்ளது. பிரச்சினைகளுக்கு முடிந்தால் ஜனாதிபதி தீர்வு காண வேண்டும் இல்லாவிடின் பதவி விலக வேண்டும்.

தற்போதைய நிலையில் யார் ஜனாதிபதி, யார் பிரதமர் என்பது எமக்கு முக்கியமல்ல. நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு அவசியம் எனவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply