இராணுவ நீக்கம் பொருளாதார இறைமையில் வலிமையை கட்டியெழுப்பும்! யாழ்.பல்கலை பேராசிரியர்

இலங்கைத்தீவின தமிழர் தாயக பகுதியான வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் நீக்கம் செய்யப்படுமானால், அது அப்பகுதியில் பொருளாதார இறைமையில் வலிமையினை கட்டியெழுப்பும் என யாழ்.பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளதார நெருக்கடியும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் எனும் தொனிப்பொருளில் நாடுகடந்த தமிழர் ஊடக மையம் நடாத்திய இணையவழி கருத்தாடல் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கின்ற அதன் இராணுவச் செலவினங்களை அடிப்படையாக வைத்து, தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவ வெளியேற்றம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போதே பேராசிரியர் இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஈழத்தமிழர்களுடைய வடக்கு கிழக்கு சார்ந்த பகுதிகளில் ஓர் சுதந்திரம் சார்ந்த விடயத்தில், நெருக்கடி விடுபட்டு போகுமாக இருந்தால், பொருளாதார ரீதியிலான இருப்பிலும் மாற்றம் ஒன்றுக்கான வாய்ப்பு உள்ளது.

2009க்கு பின்னர் இலங்கையில் செய்யப்பட்ட அனைத்து முதலீடுகளும் அரசியல் முதலீடுகள்தான். சீனா, இந்தியா, அமெரிக்கா என யாவுமே அரசியல் மூதலீடுகள்தான்.

வடக்கு கிழக்கு சேவைத்துறை சார்ந்து இலங்கையில் எந்தவிதமான பங்களிப்பும் இல்லாத பகுதியாகத்தான் இருக்கின்றது.

வடக்கு கிழக்கு நோக்கி புலம்பெயர்ந்தவர்கள் அனுப்புகின்ற டொலர்தான் பங்கீடாக தென்னிலங்கைக்கு கிடைக்கின்றது தவிர அதனைக் கடந்து உற்பத்தி சார்ந்ததளத்தில் மீளுருவாக்கத்துக்கான எந்தவிதமான வாய்ப்புக்களும் இல்லை.

போர்காலத்தில் வடக்கு கிழக்கில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நிறைய பொருட்கள், குறிப்பாக மீன், கடல்வளங்கள் கூட ஏற்றுமதி செய்யமுடியாத நிலைக்கு இராணுவசார்ந்திருக்க கூடிய செய்முறையில் உள்ள நெருக்கடியே தந்திருக்கின்றது.

இதில் இருந்து விடுபட்டு போவதற்குரிய ஓர் சூழலை ஏற்படுத்துதல் என்பது பொருளாதாரரீதியிலான வாய்ப்புக்களை மட்டுமல்ல, பொருளாதாரம் இறைமையோடு சார்ந்திருக்கும் அரசியல் இறைமைக்கும் வழிசமைக்கும்.

பொருளாதார ரீதியிலான வாய்ப்புக்களுக்கான இறைமைக்கு இராணுவ நீக்கம் என்ற செயன்முறை என்பது தமிழர் பிரதேசங்களுக்கு அவசியமானதொன்று.

அதற்கூடாக நிறைய மாற்றங்களை வடக்கு கிழக்கில் நிறைய உருவாக்க கூடிய நிலை ஏற்படும். குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் நிகழக்கூடிய நெருகடிகள், சமூக பிறழ்வுகள், சமூக பிறழ்வுகளுக்கான அடிப்படைய காரணிகள், அது வகுக்கபடுகின்ற தன்மைகள், நுகர்வுதளத்தில் காணக்கூடிய வேறுபட்ட தன்மைகள் என பல விடயங்களை நாங்கள் இதில் கோடிட்டு காட்டக்கூடியது.

இராணுவ நீக்கம் என்ற செயன்முறை சாத்தியமானால், இதன்வழியே ஓர் மாற்றத்தை வடக்கு கிழக்கு தன்னுடைய இறைமையில் வலிமையான சூழலை கட்டியெழுப்பும் என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply