குர்பாஸ் அபாரம்: லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி மகத்தான வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 8ஆவது லீக் போட்டியில் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி, 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

கண்டி- பல்லேகல மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், லைக்கா ஜப்னா கிங்ஸ் அணியும் தம்புள்ளை அவுரா அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அவுரா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரில் அணியொன்று பெற்றுக்கொண்ட அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குர்பாஸ் 73 ஓட்டங்களையும் அவிஷ்க பெனார்டோ 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தம்புள்ளை அவுரா அணியின் பந்துவீச்சில், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் பிரமோத் மதுஷான் மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 241 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தம்புள்ளை அவுரா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி, 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தசுன் சானக 44 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஷ 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லைக்கா ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், பினுர பெணார்டோ 4 விக்கெட்டுகளையும் சுமிந்த லக்ஷான் 2 விக்கெட்டுகளையும் தில்ஷான் மதுஷங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 35 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக, 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரஹமனுல்லா குர்பாஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *