கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக அலியார் றபீக் நியமனம்

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நிந்தவூரினைச் சேர்ந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் CI [Chief Police Inspector] பதவியுயர்வு பெற்று தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நிந்தவூரினைப் பிறப்பிடமாகக் கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான A.றபீக் பொலிஸ் சேவையில் கடந்த 33வருடங்களாக தன்னை பாதுகாப்புத் துறையில் அற்பணிப்புடன் சேவையாற்றிய நிருவாகத் துறையில் ஆளுமையுள்ள ஒருவராவார்.

இலங்கையின் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் இவர் நாட்டின் பல பாகங்களிலும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியுள்ளதோடு நாட்டின் பல பொலிஸ் நிலையங்களில் பல முக்கிய பிரிவுகளில் பதவியமர்த்தப்பட்டு திறன்பட சேவையாற்றி பொலிஸ் உயர் அதிகாரிகளின் பாராட்டினையும் பெற்றுள்ளார்.

அந்த வகையில் தனது ஆரம்ப பொலிஸ் சேவையினை கொழும்பிலும் பின்னர் மொனறாகலை, தனமல் வில,வீரக்கொடையிலும் குறிப்பாக பயங்கரவாதம் தலைதூக்கிய அச்சந்தர்ப்பத்தில் தாய் நாட்டுக்காய் தன்னை அர்ப்பணித்து நாட்டின் பல பாகங்களிலும் கடமையாற்றியிருந்தார்.

அத்தோடு தங்கலையில் உப பொலிஸ் பரிசோதகராகவும் (SI) அதன் பின்னர் வெல்லவாயவில் பொலிஸ் பரிசோதகராக( IP)பதவி உயர்வு பெற்று அங்கு கடமையாற்றியதோடு பின்னர் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால்காஸிம்(MP) மெய்ப்பாதுகாவலராக எட்டு வருடங்கள் கடமையாற்றியதோடு இறுதியாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் கல்முனை நீதிமன்றத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.

தனது சேவைக்காலத்தில் பொலிஸ் நிருவாகப் பிரிவில் கூடிய அனுபவம் வாய்ந்தவராக காணப்படுவதோடு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் நிருவாகப்பிரிவு (Administrative Unit)பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய நிலையிலேயே கடந்த 2020.05.08ம் திகதியன்று பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

முன்னாள் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட கே.எச் சுஜீத் பிரியந்த இடமாற்றம் பெற்று சென்றதை அடுத்து நிலவிய பதவி வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Leave a Reply