கல்வியை தக்கவைப்பதன் மூலமே நாங்கள் எங்கள் இருப்பினை பாதுகாத்துக் கொள்ளமுடியும் – மு.விமலநாதன்

தமிழர்களுக்கு உள்ள பலம் இன்றைய நிலையில் கல்வியாகும்.அதனை தக்கவைப்பதன் மூலமே நாங்கள் எங்கள் இருப்பினை தக்கவைத்துக்கொள்ளமுடியும் என சுவிஸ் உதயம் கிழக்கு மாகாண கிளை தலைவரும் முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளருமான மு.விமலநாதன் தெரிவித்தார்.

நாங்கள் என்ன பிரச்சினைக்கு முகம்கொடுத்தாலும் கல்வியென்ற விடயத்திலிருந்து விலகிச்செல்லக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளை தங்கு தடையின்றி கொண்டுசெல்லும் வகையில் சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தினால் கிழக்கு மாகாண கிளை ஊடாக தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் ட ஆரையம்பதி இராம கிருஸ்ணமிசன் மகா வித்தியாலய மாணவர்களின் நிலைமைகள் குறித்து சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து பொருளாளரும் தொழிலதிபருமான க.துரைநாயகத்தின் உதவியுடன் இந்த பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் பொருளாளரும் தொழிலதிபருமான க.துரைநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.சிறப்பு அதிதியாக செயலாளர்   றொமிலா செங்கமலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆரையம்பதி இராம கிருஸ்ணமிசன் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறிய நிலையில் உள்ள 54மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் உள்ள வறிய மக்களினது வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி இராம கிருஸ்ணமிசன் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒரு தொகை பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டன.

Leave a Reply