நிலவில் மோதவுள்ள ராக்கெட்

வாஷிங்டன், ஜனவரி 28: அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனத்தால் ஏவப்பட்ட பால்கன் 9 பூஸ்டர் ராக்கெட் நிலவில் மோதவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ்எக்ஸ்’ கடந்த 2015-ஆம் ஆண்டு பால்கன் 9 பூஸ்டர் ராக்கெட்டை ஏவியது. அந்த ராக்கெட் தனது பணியை நிறைவு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் அது விண்வெளியிலேயே கைவிடப்பட்டது.

இந்த நிலையில் விண்வெளியில் கைவிடப்பட்ட பால்கன் 9 பூஸ்டர் ராக்கெட் நிலவில் மோத இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த ராக்கெட் வருகிற மார்ச் மாதம் 4-ஆம் தேதி நிலவின் மீது மோதி வெடிக்கலாம் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து அமெரிக்க பேராசிரியர் மெக்டோவல் கூறும்போது, ‘இதுவரை சுமார் 50 பெரிய விண்வெளி பொருட்களை கண்காணிக்க முடியாமல் போய் உள்ளது. தற்போது பால்கன் ராக்கெட் நிலவில் மோதுவது உறுதிப்படுத்தப்பட்ட முதல் சம்பவமாக இருக்கலாம்.

நிலவின் பரப்பின் மீது மோதும் ராக்கெட் சிறிய பள்ளத்தை ஏற்படுத்தும். வருகிற மார்ச் 4-ந் தேதி பூமியில் இருந்து பார்க்க முடியாத நிலவின் அரைக்கோள பகுதியில் மோதலாம்.

தற்போது விண்வெளியில் சுற்றித்திரியும் குப்பைகள் அரிதாகவே மோதி வெடிக்கின்றன. இதனால் இப்போது எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருக்கலாம். அதனால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிலவில் ராக்கெட் மோதுவதால் ஏற்படும் தாக்கம் சிறிதாகவே இருக்கும்’ என்றார்.

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்ப போதுமான திறன் இல்லாத காரணத்தால் விண்வெளியிலேயே லட்சக்கணக்கான விண்வெளி குப்பைகள் சுற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply