
இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை கண்டித்தும்,தமிழக படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையை கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட 11 மீனவர்களை, படகுடன் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் இன்று முதல் காலவரயற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ராமேஸ்வரம் விசைப்படகு வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் முற்றிலும் வேலையிழந்துள்ளதோடு மீன்பிடி சார்பு நிறுவனங்களும் பூட்டப்பட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு சுமார் ரூ,4 கோடி முதல் 5 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் அடுத்தகட்ட போராட்டமாக வரும் வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் ஊர்வலமாக சென்று ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் சேது விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.





