
திருகோணமலை – குமாரபுரம் படுகொலையின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல் தினம் இன்று வெள்ளிக்கிழமை மாலை குமாரபுரத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
குமாரபுரம் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பிரதேச மக்கள் ஒன்றிணைந்து நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மா சாந்தி வேண்டி குமாரபுரம் – சித்தி விநாயகர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
மேலும், குமாரபுரம் நினைவுத் தூபிக்கு சென்று தீபம் ஏந்தி, மலர்தூவி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
1996.02.11ஆம் திகதி இடம்பெற்ற குமாரபுரம் படுகொலையில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் உட்பட 26 நபர்கள் உயிரிழந்ததோடு, 25 நபர்கள் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








