
2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை, தொழிற் பயிற்சிக்கு உட்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கும் நடைமுறை ஒன்றை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் சுமார் 98,000 மாணவர்கள் உயர்தரத்துக்கு தகுதி பெறவில்லை.
இவர்களுள், கணிதப் பாடத்தில் சித்தியடையாத, ஆனால் பின்னர் அதன் பெறுபேற்றை பெற்றுத் தருவதாக கூறி க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்கள் அனைவரும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவர்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகைமை பெறாத மாணவர்கள் பிரதேச செயலக மட்டத்தில் இனங்காணப்பட்டு அவர்களின் திறன்கள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.




