
கொழும்பு, பெப் 14: அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து அமல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஆயிரத்து 971 முறைப்பாடுகளை ஆராய்ந்து, மூன்று தொகுதிகளாக, 2 ஆயிரத்து 43 பக்கங்களைக் கொண்ட இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




