மிக நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினையால் அவதியுற்ற மக்களுக்கு இராணுவத்தினர் இன்றிலிருந்து குடிநீர் வசதியை வழங்குவதாக உறுதி அளித்ததுடன் அதனை இன்றே நடைமுறைப்படுத்தியும் உள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கல்லுண்டாய் குடியேற்றத் திட்டத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான குடிநீர் வசதிகளை மானிப்பாய் பிரதேசசபை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் என்பன சரியான முறையில் வழங்கவில்லை.
குறித்த தண்ணீர் பிரச்சினையையும் ஏனைய அடிப்படை பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி அப்பகுதி மக்கள் பலமுறை போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இருப்பினும் அவர்களது ஆர்ப்பாட்டங்களுக்கு தகுந்த தீர்வு இதுவரை எட்டப்படாமையால் அவர்கள் இன்று தமது குடியேற்றத் திட்டத்துக்கு முன்பாக வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பகுதிக்கு வருகைதந்த இராணுவத்தினர் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் அவர்களுக்கு விடயத்தை தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து, இன்றிலிருந்து குறித்த பகுதி மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்குமாறு அவர் பணித்திருந்தார்.
அதன்பின்னர் போராட்டம் ஆரம்பித்து சுமார் ஒரு மணி நேரத்திற்குள் இராணுவத்தினருடைய தண்ணீர் வாகனம் அவ்விடத்திற்கு வந்து மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்கிச் சென்றது.
தொடர்ந்து குடிநீர் வழங்குவதாக உறுதியளித்த இராணுவத்தினருக்கு மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.







