இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால்
தேசிய நல்லிணக்கம் பாதிக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடையாது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை
நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காவல்துறை மற்றும் காணி அதிகாரத்தை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க ஒரு போதும் இடமளிக்க முடியாது என உதய கம்மன்பில கூறியுள்ளார்.
அத்துடன், வடக்கு – கிழக்கில் காணி தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் விசேட பொறிமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பான தீர்மானம் பொது மக்களால் மேற்கொள்ள வேண்டுமெனவும் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமைக்கு ரணில் விக்ரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும் எனவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.




