போராடிக் கொண்டிருந்த மக்கள், எம்.பிக்கள் மீது பொலிஸார் அச்சுறுத்தல்! வால் பிடிக்கும் காட்சிகள் இனியாவது திருந்துங்கள் – சுகாஷ் சீற்றம் samugammedia

தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக ஜனநாயக முறையில், அகிம்சை முறையில் சட்டத்தை மதித்து, வீதியோரமாக வெயிலுக்கு மத்தியில் போராடிக் கொண்டிருந்த மக்கள் மீதும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும், பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காட்டுமிராண்டித்தனமாக நடந்து அவர்களை அச்சுறுத்தி அவர்களை அந்தப் போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு முற்பட்டார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் தையிட்டியில் இடம்பெற்ற போராட்டத்தின்போது பொலிசாரின் அராஜகம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவரை இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த இடத்தில் போராட்டம் செய்ய முடியாது என்றும் அவ்வாறு போராட்டம் செய்தால் அவர்களை கைது செய்வேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார். உண்மையில் அவர் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் போது இலங்கையில் நாட்டுச் சட்டம் இருக்கிறதா அல்லது காட்டுச் சட்டம் இருக்கிறதா என்று தான் நாங்கள் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

ஒரு சட்டத்தின் அடிப்படை விழுமியங்களை கூட தெரியாது ஜனநாயகப் போராட்டங்களை அடக்க முற்படுகின்றார்கள். 

அவர்களுக்கு நாங்கள் சொல்கின்ற செய்தி என்னவென்றால் இந்த அடக்குமுறைகளுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ நாங்கள் அடிபணிய போவது கிடையாது, இதைவிட நாங்கள் அதிகம் பார்த்து விட்டோம்.

ஆகவே தொடர்ந்து நீங்கள் இவ்வாறு மக்கள் மீது அடக்கு முறையை பிரயோகித்தால் மக்கள் எதிர்காலத்தில் எவ்வாறு எதிர்வினை ஆற்றுவார்கள் என்று தெரியாது.

இனியும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற பன்னாட்டு மன்றங்கள், சர்வதேச சமூகங்கள் மற்றும் 13 வது திருத்தச்சட்டத்தின் கீழ் தீர்வை எடுப்பது என்று கூறி அரசாங்கத்துக்கு வால் பிடித்துக் கொண்டு திரியும் தமிழரசு கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் எல்லாம் இனியாவது முதுகெலும்போடு செயல்படுங்கள்.

நாங்கள் சர்வதேசத்திடம் கேட்பது காலதாமதம் இல்லாமல் உடனடியாக ஒரு சர்வதேச விசாரணையை, ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு எதிராக முன்னெடுங்கள். 

அரசாங்கத்துக்கு வால் பிடிக்கும் காட்சிகள் இனியாவது திருந்துங்கள். அல்லது எங்களது இனத்தை அழித்த அந்த துரோகத்தில் நீங்களும் ஒரு பங்குதாரர்களாக விரும்பியோ விரும்பாமலோ வர வேண்டி வந்துவிடும் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *