பல்வேறு சர்ச்சைகள் இடம்பெற்ற பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவம் samugammedia

முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று காலை ஆரம்பமாகி சிறப்புற இடம்பெற்று இன்று அதிகாலை  நிறைவு பெற்றது. 

நேற்று (04.08.2023)பிரதம குரு  திருஞானசம்பந்த குருக்கள், மற்றும் ஆலயபூசகர் சிவபாதன் கணேசபுவன் ஆகியோர்களால் காலை 8 மணியளவில் விஷேட அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து 11.30 மணியளவில் விநாயக பெருமானுக்கும் பரிவார மூர்திகளுக்கும் விஷேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்குதலும், களாஞ்சி பிரசாதம் வழங்குதலும் இடம்பெற்று அதனை தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று (04) மாலை கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து பாரம்பரிய முறைப்படி  மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு ஆலய பூசகரால் பாரம்பரிய முறைப்படி  பொங்கல் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து இன்று(5) அதிகாலை  பரியலம் வழிவிடுதல்  இடம்பெற்று பொங்கல் உற்சவம் சிறப்பாக நிறைவுபெற்றது. 

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து சட்ட விரோதமாக பௌத்த விகாரை அமைத்து பல்வேறு நெருக்கடிகள் வழங்கப்பட்டு வந்திருந்தது.

இதன் பின்னர்  நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு அமைய தற்போது குறித்த ஆலயத்தின் வழிபாடுகள் தொடர்ச்சியாக ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வருடத்துக்கான பொங்கல் உட்சவமும் சிறப்பாக இடம்பெற்றது

இந்த பொங்கல் வழிபாடுகளுக்காக ஆலய வளாகத்தில் விசேடமாக பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *