வண்ணாத்திவில்லு எலுவாங்குளம் இறால்மடு பிரதேசத்தில் மரை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் இருவர் தப்பியோடியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு மரை இறைச்சியை சட்டவிரோதமாக கொண்டு செல்வதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள வலைய உதவிப் பொறுபதிகாரி எம்.பி.எல்.எஸ் மாரசிங்ஹவிற்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று பிற்பகல் இறால்மடுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒருவர் இறைச்சியுடன் கைது செய்யப்பட்டதுடன் இருவர் தப்பியோடியதாக அவர் தெரிவித்தார்.
இதன் போது சுமார் 75 கிலோகிராம் மரை இறைச்சி கைப்பற்றப்பட்டதாகவும், இறைச்சியை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த விலங்கு இறைச்சிக்காக தப்போவ சரணாலயத்தில் வேட்டையாடப்பட்டதாக சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது தெரிவித்ததாக அவர் இதன்போது தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எலுவாங்குளம் இறால்மடு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவரென வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி எம்.பி.எல்.எஸ் மாரசிங்ஹ தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று மாலை புத்தளம் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர் வருகின்ற 16ம் திகதி வரை விளக்கமரியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்ததாக வனஜீவராசிகள் வலைய உதவிப் பொறுப்பதிகாரி எம்.பி எல்.எஸ் மாரசிங்ஹ இதன்போது தெரிவித்தார்.