மலையகத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க கைகோர்ப்போம்…! யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்..!samugammedia

மலையகத் தமிழ் மக்கள் மீது அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட ஒடுக்கு முறைக்கு எதிராக நாங்கள் என்றும் தொடர்ந்து போராடுவோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எங்கள் மலையக தமிழ் மக்களின் 200 வருட வரலாற்றினை நினைவு கூறும் வகையில் இந்த வருடம் முழுவதும்  பல்வேறு தரப்பினரால் பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகிறது. 200 வருட நிகழ்வுகள் வெறுமனே நிகழ்வுகளாக முடிந்துவிடாமல் மலையக தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க   வேண்டியதன் அவசியத்தினை அனைத்துத் தரப்பினரிடமும் வலியுறுத்துகிறோம்.

1980களின் பின் அவர்களுக்கான  குடியுரிமை படிப்படியாக வழங்கப்பட்டதன் பின்னரே இச்சமூகத்தில் சில மாற்றங்கள் உருவாகின. தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் எத்தனையோ வறுமை, சமூக நெருக்கடி, துன்பங்களின் மத்தியிலும் கல்வியில் முன்னிலை வகிக்கின்றனர். அதற்கு சான்றாக எமது பல்கலைக்கழகத்தில் மலையக தமிழ் மாணவர்கள் அனைத்துத் துறைகளிலும் மிளிர்ந்து வருகின்றார்கள். படிப்படியாக அவர்கள் தமது சுய முயற்சியிலேயே முன்னேறி வந்துள்ளார்கள்.

ஆனால் தேசிய ரீதியான வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது இன்றுவரை அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. கடந்த 200 வருடத்தில் அடைந்தவை சில, அடைய வேண்டியவை பல என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இருப்பினும் 200 வருட வரலாற்றை நினைவு கூரும் இந்த வருடத்தில் எம் மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள்  சர்வதேசத்திலும் அரசியல் மற்றும் சிவில் சமூக மட்டத்திலும் பேசுபொருளாக உள்ளது. அந்த முன்னேற்றத்தை மலையக தமிழ் மக்களின் நிரந்தர தீர்வுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை பற்றிப் பேசும்போது எங்கள் மலையகத் தமிழ் மக்களின் தேசிய அடையாள மற்றும் சுயநிர்ணயம் பற்றியும் கூடுதல் கவனம் செலுத்தி அழுத்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply