மத்திய மாகாணத்திற்கு குடிநீரை எவ்வாறு தடையின்றி வழங்குவது? விசேட கலந்துரையாடல்

கடும் வறட்சியால் மத்திய மாகாணத்தில் நிலவும் நீர் பிரச்சினை சம்பந்தமாகவும், குடிநீரை எவ்வாறு தடையின்றி வழங்குவது தொடர்பிலும் விசேட கலந்துரையாடலொன்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் அவரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடும் வறட்சியால் கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு குடிநீரை வழங்குவதில் உள்ள இடர்பாடுகள் பற்றி ஆராயப்பட்டது.

அத்துடன், கண்டியில் எசல பெரஹரா உற்சவம் ஆரம்பமாகியுள்ளது, ஆசிய விளையாட்டு போட்டியும் நடைபெறவுள்ளது. எனவே, கண்டி நகர் மற்றும் அதனை அண்மித்துள்ள கிராமங்கள் மற்றும் தோட்டங்களுக்கு தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான முகாமைத்துவ பொறிமுறை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு தடையின்றி குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள், கண்டி மற்றும் நுவரெலியா மாநகரசபைகளின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவால் விரைவில் அறிக்கை கையளிக்கப்படும்.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் சஞ்சீவ விஜயகோன், மத்திய மாகாண பிரதான செயளலார், கண்டி மாவட்ட அரசாங்க அதிபர், கண்டி மாநகர முன்னாள் மேயர், நுவரெலியா மாநகர முன்னாள் மேயர், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மத்திய மாகாண பிரதி பிரதான முகாமையாளர் மற்றும் உயர் மட்ட அதிகாரிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், செயலாளர்கள் என பலரும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a Reply