இலங்கை வரலாற்றில் தென்னிலங்கையில் மக்களின் அறவழிப் போராட்டத்தால் முன்னாள் ஐனாதிபதி கோட்டாபய துரத்தப்பட்ட பின்னர் அரகல தரப்பு ஏனையோரையும் விரட்ட தீவிரம் பெற்ற போது பதில் ஐனாதிபதியாக பொறுப்பேற்று ஒரு சில நாட்களில் நீண்டநாள் போராட்டக்காரரை விரட்டி வீட்டுக்கு அனுப்பினார் ரணில் விக்கிரமசிங்க. ஆனால் தற்போது ஒரு இனத்தை குறி வைத்து குறிப்பாக தமிழர்களை கொதிப்படைச் செய்யும் வகையில் இனவாதிகள் வெளியிடும் இனவாதக் கருத்துக்களை ஏன் கட்டுப்படுத்தவில்லை? என்ற சந்தேகம் தமிழர்களிடம் ஒரு அச்சத்தை தோற்றுவித்துள்ளது எனவும் மாறாக மறைமுக சுதந்திரம் இனவாதிகளுக்கு ஐனாதிபதி வழங்கியுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக ரெலோ இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களையும் அவர்களது தொன்மையான தொல்லியல்களையும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளையும் தமிழ் நீதிபதியையும் குறிவைத்து மிகப் பாரதூரமான கருந்துக்களை மேர்வின் சில்வா, சரத் வீரசேகர, உதய கம்மன்பில, வீமல் வீரவன்ச,பொது வெளியிலும் பாராளுமன்றத்திலும் கூறிவருகின்றனர் இதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் ஒரு ஒப்புக்கு கூட எதிர்க்கவில்லை.
எனவே மீண்டும் தமிழர்களை அடக்கி அவர்களின் இருப்பை கபளீகரம் செய்ய முழு அரச இயந்திரமும் தயாரா? அத்துடன் இனவாதிகளின் கருத்துக்களுக்கு வெளிநாட்டுச் சக்திகளும் மறைமுக ஆதரவா? மீண்டும் ஒரு இனத்தை அழித்து தங்கள் பூகோள நலன்களை பெற முயச்சிக்கின்றார்களா? இப்படியான கேள்விகள் அச்சங்கள் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளன.
பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி கருத்து வெளியிடுவது ஒரு புறம் இருக்க பொது வெளியில் தமிழர்களின் தலையை வெட்டி களணிக்கு கொண்டு வருவேன் என கூறிய மேர்வின் சில்வாவிற்கு ஏன் ஐனாதிபதி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.