
முல்லைத்தீவு, பெப்.17:
முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பகுதியில் காட்டு யானையொன்றை உயிரிழக்கச் செய்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் (வயது 46) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த பெண்ணை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பெண்ணுக்கு சொந்தமான, ஒட்டுச்சுட்டான் – ஓதியமலை பிரதேசத்தில் உள்ள வயல்வெளியொன்றில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட 8 வயதுடைய காட்டு யானையொன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, ஒட்டுச்சுட்டான் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதன்போது, சந்தேக நபரான பெண்ணின் வயலில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டிருப்பதை அவதானித்த பொலிஸார், குறித்த மின்வேலியில் சிக்கியே யானை உயிரிழந்திருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.





