இன்று நாட்டு மக்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கும், மருந்துகளை உட்கொள்ளவும், மயக்க மருந்துகளை பெற்றுக்கொள்ளவும் அச்சமடைகின்ற நிலையில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான கயந்த கருணாதிலக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்றையதினம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மோசடி முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட மருந்துகளால், குழந்தைகள், இளைஞர்கள் , முதியவர்கள் என வயதுபேதமின்றி பல உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம், இலங்கையின் சுகாதார நிலைமை தொடர்பில் பாரிய அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளதோடு இலங்கையின் சனத்தொகையில் 60 லட்சம் மக்கள் உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்குவதாகவும், அத்தோடு இலங்கையின் சனத்தொகையில் 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தங்களின் 3 வேளை உணவினை 1 வேளையாக மட்டுப்படுத்தியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு சிறுவர்கள் , பாடசாலை மாணவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி தாய்மார்கள் என்போர் உணவு போஷாக்கின்மையால் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் , சிறுவர்களுக்கான போஷாக்கின்மை வீதமானது இந்த ஆண்டு செப்டம்பர் வரையில் 50 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை தடுப்பதற்கான வேலைத்திட்டம் குறித்து அமைச்சிடம் கேட்ட போது உரிய பதிலளிக்காமல் அதனை சுட்டி காட்டிய சமல் சஞ்சீவ அவர்களை வேலைநிறுத்தம் செய்ததாகவும் குறிப்பிட்ட அவர் இந்த அரசின் கீழ் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அதனுடைய தரத்தை இழந்துள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவமனைகளில் நோய்களை கண்டறியும் இயந்திரங்கள் தரமற்றதாக காணப்படும் நிலைமை உள்ளதாகவும், மருத்துவமனையில் நிலவும் தரமற்ற மருந்து பாவனையால் அதிகமான விலைகளை செலுத்தி மருந்துகளை கொள்வனவு செய்ய தற்போது மக்கள் பழகி விட்டதாகவும் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.