
வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு தேவையேற்படின் செயலூக்கி தடுப்பூசிக்கு மேலதிகமாக, நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்க முடியும்.
எவ்வாறிருப்பினும் நாட்டிலுள்ள அனைவருக்கும் நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
சில நாடுகளில் நான்காம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள வைத்திய நிபுணத்துவ தரவுகளுக்கமையவும், உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமையவுமே இலங்கையில் நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்க முடியும். எனினும் இது தொடர்பில் எவ்வித பேச்சுகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.





