கனடாவுக்கு அனுப்புவதாக 59 லட்சத்து 35 ஆயிரம் ரூபாவை வாங்கி கொண்டு போலி விமானச் சீட்டை வழங்கி மோசடியில் ஈடுபட்ட களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த போலி வெளிநாட்டு முகவர் ஒருவரை நேற்று(11) கைது செய்துள்ளதாக மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.
மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஒருவரிடம் அவரை கனடா நாhட்டுக்கு அனுப்புவதாக களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் 59 லட்சத்து 35 ஆயிரம் ரூபாவை வாங்கிக் கொண்டு கனடாவுக்கு அனுப்புவதாக இழுத்தடித்து வந்துள்ள நிலையில் கடைசியாக கனடாவிற்கான போலி விமான சீட்டை வழங்கி கனடாவிற்கு அனுப்பாது ஏமாற்றி வந்துள்ளார்.
இதனையடுத்து பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு போலி முகவருக்கு எதிராக மட்டு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து தலைமறைவாகியிருந்த போலி முகவரை விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் களுவங்கேணியில் வைத்து நேற்று(11) கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 40 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.





