இந்துசமுத்திர அதிகாரப்போட்டியில் மையப்புள்ளியாகும் பாக்கு நீரிணையும் தமிழர்களின் வாழ்வாதாரமும். 99 வருட ஓப்பந்த அடிப்படையில் அம்பாந்தோட்டையை கையகப்படுத்திய சீனா தமிழர்கள் நலன்சார்ந்து செயற்படும் என நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது என ஜனநாயகபோராளிகள் ஊடகப்பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,சீனா போன்ற ஓரு பெரிய தேசம் வடக்கில் மீன்பிடிக்க வரவில்லை தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்து தமிழர்களை இடம்பெயரசெய்து பாக்கு நீரிணையை தம்வசப்படுத்தி தமிழர் தேசத்தை தமது பிராந்தியமாக்கி அதனூடக முழு இலங்கையையும் பாக்குநீரிணையின் மறுபக்கமான தமிழகத்தையும் கேரளாவையும் தமது கட்டுப்பாட்டு பிராந்தியமாக்குவதே அவர்களது பிரதான இலக்காகும்.
அதன் ஆரம்ப கட்டம்தான் வடகடல் எங்கினும் மக்கள் தமது ஜீவனோபாயமாக சிறுகடல் தொழில் மேற்கொள்ப்பட்ட பிரதேசங்களை அவர்களிடம் இருந்து பறித்து அட்டை வளர்ப்பு பண்ணைகளாக மாற்றியிருக்கிறார்கள். இன்று அட்டை வளர்க்கும் கடல்பிரதேசங்கள் தமது இயற்கை சமநிலை தன்னையினை இழந்து வருகின்றன. அந்த பண்ணைகளில் பாவிக்கப்படும் உயர் தன்மையுடைய வெளிச்சங்களால் மீன்களின் கருக்கள் அழிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சீனாவின் நில ஆக்கிரமிப்புக்கான நகர்வுகளை எமது மக்களின் இருப்பு அவர்களின் பொருளாதாரம் எதிர்காலம் கருதி அவர்களது வருகையை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்.
திருகோனமலையும் பாக்கு நீரிணையும் யார் கையில் வைத்திருக்கிறார்களோ அவர்களால்தான் ஆசியாவையும் இந்துமாக சமுத்திரத்தையும் கையாள முடியும். இதன் நிமித்தமே போர்த்துகீசர் டச்சுகாரர் ஆங்கிலேயர்கள் வந்தார்கள் வென்றார்கள் ஆண்டார்கள் சென்றார்கள். ஆனால் சீனாவின் நகர்வு வெற்றிபெறுமானால் ஒருபோதும் பாக்கு நீரிணையை விட்டு செல்லமாட்டார்கள். இந்துமாகடல் சீனமயமாகும்.
இந்தியா ஒரு மெத்தன போக்கோடு இலங்கையை எப்போதும் கையாளலாம் என என்னுகின்றது. அதன் வெளிப்பாடுதான் அண்மைய இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் இந்திய நிதி அமைச்சர்களின் வருகையின்போதும் தமிழ்தலைமைகள் புறக்கணிக்கப்பட்டமையாகும். பிரதமரை சந்திக்க கடிதம் அனுப்பப்பட்டும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளமை. இந்துமா சமுத்திரத்தின் பலமான பாக்கு நீரிணையின் இரு கரைகளிலும் ஈழத்தமிழர்களும் தமிழகதமிழர்களும் கேரளமும் தங்கியுள்ளமையே இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு உத்தரவாதமாகும். ஈழத்தமிழினத்தின் வாழ்வும் வளமுமிக்க பாக்கு நீரிணையில் இந்திய சீன பலப்பரீட்சை களமாக மாறுமாயின் முதலில் அழிவது ஈழத்திமிழர்கள்தான் அதனை ஒருபோதும் கைகட்டி வேடிக்கை பார்க்க போவதில்லை என்பதனை வலுவாக பதிவு செய்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.