கடந்த வருடங்களை போன்றே இந்த வருடமும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை இவ்வரவு செலவு திட்டம் கொடுத்துள்ளது. என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்
பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இந்த வரவு செலவு திட்டமானது நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் ஒன்றாகவே உள்ளது. வெறுமனே கவர்ச்சியை காட்டுகின்ற வரவு செலவு திட்டமாகவே இருக்கிறது. துறைகள் யாவும் வீழ்ச்சியை கண்டுள்ளது. கடன் வரம்பு எல்லை அதிகரித்துள்ளது. நாடானது முன்னேற்ற பாதையில் செல்லவில்லை. வரிவிதிப்பு அதிகரித்துள்ளது. மக்களின் வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளது. நாட்டு மக்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான முன்மொழிவுகள் இதில் காணப்படவில்லை.
யுத்தம் முடிந்த பின்னரும் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதி எங்களின் இருப்பை அழிப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க போவதில்லை. கல்வி, சுகாதார துறைக்கு நிதிகள் ஒதுக்கப்படவில்லை. நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமாயின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அனால் கைதொழில் துறைக்கு நிதி ஒதுக்கவில்லை. இப்படி இருந்தால் நாடு எவ்வாறு வளர்ச்சி அடையும்? குறைவான நிதி ஒதுக்கீடு எப்படி துறைகளை வளர்க்கும்? போரால் அழிந்த வடமாகாணத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. தொல்பொருள் திணைக்களத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுள்ளது. மக்களுக்கிடையே இனவிரிசலை தொல்பொருள் திணைக்களமே ஏற்படுத்துகிறது.
கடந்த வருடங்களை போன்றே இந்த வருடமும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை இவ்வரவு செலவு திட்டம் கொடுத்துள்ளது. வடக்கின் அபிவிருத்திக்கு எந்த விதமான நிதியும் இதில் முன்மொழியப்படவில்லை. இதன் மூலம் தமிழர் தேசத்திற்கு எவ்வித பயனும் இல்லை. எங்கள் பிரதேச வளம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. இதனை எங்கள் மக்களிடமிருந்து பறித்து இன்னொரு மக்களுக்கு கொடுக்கும் இந்த அபிவிருத்தி எங்களுக்கு தேவை இல்லை. சிங்கள மக்களை அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கிற்கு கொண்டு வருவதாக இருந்தால் அதை நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம். எங்கள் உரிமையை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். எங்களது இறையாண்மையை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.