முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி பண்ணையாளர் பரிதாபமாக உயிரிழப்பு…!samugammedia

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பித்திடல் பகுதியில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி பண்ணையாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (03) இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவத்தில் தம்பலகாமம் – சிப்பித்திடல் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கே.சசிகுமார் (வயது 36) என்ற பண்ணையாளரே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த குறித்த பண்ணையாளர் இன்று (03) காலை கால்நடைகளை மேய்ப்பதற்காக பாலம்போட்டாறு பகுதியில் உள்ள ஊத்த வாய்க்கால் என்ற வாய்க்காலை கடந்து சென்றபோது காணாமல் போயிருந்ததாகவும், பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின்போது குறித்த நபரின் சடலம் இன்று (03) மாலை 04 மணியளவில் குறித்த நீர்நிலையில் இருந்து மீட்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பலகாமம் பகுதியில் உள்ள 45க்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் தங்களுடைய 1200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கான மேய்சல் தரை இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த மரணம் தொடர்பிலான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *