சாந்தன் மிக விரைவில் இலங்கைக்கு வருவார்..! அமைச்சர் டக்ளஸின் தேசிய நல்லிணக்கம் மூலமே சாத்தியமானது…!சிறீரங்கேஸ்வரன் பெருமிதம்…!samugammedia

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட  சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராசா மிக விரைவில் இலங்கை வருவார் என்றும் இது தேசிய நல்லிணக்கத்தின் ஊடகவே சாத்தியமாகிறது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ.சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று(03)  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியினுடைய கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தன் என்று அழைக்கப்படுகின்ற தில்லையம்பலம் சுதேந்திரராசா அவர்கள் இலங்கை வருவது தொடர்பாக ஊடகங்களிலே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

உண்மையில் அவர்  இலங்கைக்கு வருவதற்கு அவர்களுடைய பெற்றோர் எங்களுடைய கட்சியினுடைய தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் அணுகி தங்களுடைய மகனை இலங்கைக்கு அழைத்து வருவதில் உள்ள தடைகள், பாதுகாப்பு தரப்பினது அனுமதிகளை பெற்றுத்தருமாறு கோரியிருந்திருக்கிறார்கள்.

உண்மையிலே, எங்களுடைய தலைவர் தேசிய நல்லிணக்கத்தை தென்னிலங்கை தரப்புக்களுடன் நட்பை வளர்த்ததன் ஊடாக பின்பற்றியதன் ஊடாக நாங்கள் சாத்தியப்படுத்தக் கூடியதான சமிக்கைகள் தெரிகின்றன.

சாந்தனுடைய தாயார் 77 வயதுடைய தில்லையம்பலம் மகேஸ்வரி அம்மையார், தன்னுடைய மகனை தன்னுடைய முதுமை காரணமாக இந்தியாவிற்க்கு சென்று அவரது மகனை பார்க்க முடியாதுள்ளதாகவும், ஆகவே மனிதாபிமான அடிப்படையில் தனது மகனை இலங்கைக்கு அழைத்துவர தங்களாலான உதவிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அந்தவகையில் தென்னிலங்கை அரசுடன் அமைச்சர் தொடர்பு கொண்டதன் ஊடாக அவருடைய வருகை விரைவு படுத்தப்பட்டிருக்கின்றது.

நாங்கள் அறிக்கை விடுவதன் ஊடாகவோ, அல்லது அழுத்தங்களை பிரயோகிக்கின்ற பலமோ அல்லது பேரம் பேசுகின்ற பலமோ தமிழர் தரப்பில் இல்லா சூழல் இருக்கின்றது.

இதனூடாக தேசிய நல்லிணக்கம் தான் இவ்வாறான வாய்ப்புக்களை சந்தர்ப்பங்களை உருவாக்கி தந்திருக்கிறது.

ஆகவே, கடந்த நல்லாட்சி அரசு காலத்திலே பல தமிழ் இளைஞர்கள் தமிழ் அரசியல் கைதிகளாக சிறைகளிலே நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட, நல்லாட்சி அரசை கொண்டுவந்தவர்கள் கூட நல்லாட்சி அரசினுடைய காவலர்களாக செயற்பட்டவர்களும் அவர்களை விடுவிப்பதிலே அல்லது அவர்களது வழக்குகளை இரத்து செய்து பொது மன்னிப்பு அடிப்படையில் அவர்களது பெற்றோர்களுடன் இணைப்பதிலே எவ்வளவு அக்கறை காட்டினார்கள் என்பது உலகறியும்.

ஆனால், நாங்கள் தென்னிலங்கையுடன் இருக்கின்ற தேசிய நல்லிணக்கம் காரணமாக ராஜீவ் காந்தியினுடைய கொலை வழக்கிலே குற்றஞ்சாட்டப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருக்கும் சாந்தனின் தாயார் எங்களுடைய வடமராட்சி பகுதியிலே வசித்து வருகின்றார்.

அவருடன் இணைப்பதற்கான சகல விதமான செயற்பாடுகளையும் நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம்.

ஆகவே, காகித அறிக்கை விடுபவர்கள் அல்லது தேசிய நல்லிணக்கத்திற்க்கு அப்பாற்பட்டு செயற்படுபவர்கள் அல்லது அரசியல் பலங்களை பிரயோகிக்க முடியாதவர்கள், இவ்வாறு நல்லாட்சி அரசு காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது நன்கு தெரியும். 

அவர், ராஜீ்வ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தாலும் மனிதாபிமான அடிப்படையிலே எங்களுடைய அமைச்சர் அந்த முயற்சியை எடுத்து அவர் தனது  தாயாருடன் மிக விரைவில் வந்து சேர்வார் என்பதை நாங்கள் இந்த இடத்திலே தெரிவித்து கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *