கிழக்கில் கடலில் மூழ்கி மாயமான இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு!

அம்பாறையில் நேற்றையதினம் கடலில் மூழ்கி மாயமான பாடசாலை மாணவர்கள் இருவரும் இன்று முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மாளிகைக்காடு – சாய்ந்தமருதைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 8 பேர் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்றுப் பிற்பகல் படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது அதில் இருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர். அவர்களின் சடலங்களே இன்று மீட்கப்பட்டுள்ளன.

மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15), சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் இல்ஹம் (வயது 15) ஆகிய மாணவர்களே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவதினம் 08  பாடசாலை  மாணவர்கள்  தொழுகையை முடித்துக்கொண்டு, 

துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர் – ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது  இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கடலில் இழுத்து காணாமல் போன மாணவர்களை சம்பவத்தை கேள்வியுற்ற நிமிடம் முதல் மீனவர்களும், பொதுமக்களும் தேடி அலைந்து இந்த ஜனாஸாக்களை மீட்டுள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி  எம்.ரீ.சபீர் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டார்.

மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர்களான எம்.ஏ. பசீல், ஆர். விமலேந்திரன் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *