சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய வித்தியாரம்ப விழா…!

சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா கல்லூரி முதல்வர் அஷ்ஷேஹ் எம்.ஐ.எம் கலீல் (நழீமி) தலைமையில் நேற்றையதினம்(22) பாடசாலையில் அமைக்கப்பட்ட வெளியக அரங்கில் நடைபெற்றது.

இப்பாடசாலையில் 2024ம் கல்வி ஆண்டில் தரம் 1 இற்கு புதிய அனுமதிக்கப்பட்ட மாணவர்களை மகிழ்ச்சிகரமாக வரவேற்கும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் டொக்டர் எஸ்.எம்.எம். செய்யத் உமர் மௌலான, கௌரவ அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப் பிரதிப் பணிப்பாளர் ஏ.எல். அப்துல் மஜீட் ஆகியோரும் பாடசாலையின் பிரதி அதிபர்களான திருமதி எஸ்.எஸ்.ஏ.சலீம், எஸ்.எம்.எம்.சஜீர், உதவி அதிபர் திருமதி எச்.எஸ்.றுக்சானா பர்வின் மற்றும் ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெற்றோர் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது தரம் 2 மாணவர்களால் தரம் 1 மாணவர்கள் வரவேற்கப்பட்டதோடு அதிதிகளினால் தரம் 1 மாணவர்களுக்கு கிரீடம் மற்றும் நினைவுப் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மௌலவி றம்சின் (காசிபி) அவர்களினால் மாணவர்களின் கல்வி விருத்திக்கான துஆ பிரார்த்தனையுடன் அகரம் எழுதும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் இதன்போது காவியத்தை ஓவியமாக்கி ஓவியத்துடன் நடனமாடும் நிகழ்வு மற்றும் சமூக வலைத்தளங்களின் பிடியில் சிக்காது சரித்திரம் படைத்தல் எனும் தொனிப்பொருளில் அமைந்த விழிப்புணர்வு நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.

சிறிய அளவிலான வளாகத்திற்குள் இயங்கும் இப்பாடசாலையின் செயற்பாடுகள் அனைத்தும் மெச்சத்தக்க வகையில் முன்மாதிரி மிக்கதாக அமைந்துள்ளதனை பாராட்டுவதாக இதன்போது உரையாற்றிய வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது பிரதம அதிதியாக கலந்து நிகழ்வைச் சிறப்பித்த சம்மாந்துறை வலையக்கல்விப் பணிப்பாளருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பெற்றோருடன் பாடசாலைச் சமூகம் மிக நெருக்கம் கொண்டு செயற்படுவதன் விளைவாய் இப்பாடசாலையின் பெற்றோர் ஒருவர் தாமாகவே முன்வந்து ஒரு தொகுதி மாணவர் கதிரை, மேசை என்பவற்றை இதன்போது அன்பளிப்பாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *