இந்திய மீனவர்களின் போராட்டம் நியாயமற்றது…! தென்னிந்திய அரசும் மீனவர்களுக்கு ஆதரவு…! நற்குணம் சீற்றம்…!

இராமேஸ்வரத்திலே இந்திய மீனவர்கள் நியாயமற்ற முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்றையதினம்(24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றினை நடத்தி இருந்தோம். அந்தப் போராட்டத்தில் எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தோம்.

அத்துடன் இந்திய இழுவைப் படகு அத்துமீறி எல்லை தாண்டி வருகின்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை இந்திய துணை தூதுவரிடம் நேரடியாக வலியுறுத்தி கூறியிருக்கின்றோம்.

இராமேஸ்வரத்தில் இந்திய மீனவர்கள் நியாயமற்ற போராட்டம் ஒன்றினை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். நமது கடல் எல்லை பரப்பிற்கு உள்ளே வந்து நமது வளங்களை களவாடி செல்கின்றவர்கள் இன்று நியாயமான போராட்டம் என்ற பேரிலே தமது களவுத் தொழிலையும், அத்துமீறிய அநியாயமான தொழிலையும் நிலை நிறுத்துவதற்காகவும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு, தென்னிந்திய அரசும் உடந்தையாக இருந்து ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த நிலை தொடருமானால் எமது வடபகுதி கடல் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்பட்டு நாங்கள் வறுமையில் சாக வேண்டிய ஒரு நிலை ஏற்படும்.

நாங்கள் பேசாமல் இருக்கும் வரை அவர்கள் எமது கடற் பகுதியை ஆக்கிரமித்து விடுவார்கள். அந்த வகையிலே இன்று ஒரு நிகழ்வு இந்தியா பகுதியில் போய்க்கொண்டிருக்கிறது. இந்திய தரப்பிலே ஒரு கருத்து வருகின்றது. தென்னிந்திய அரசும் அந்தப் பகுதியிலேயே இருக்கின்ற மீன்வளத்துறை அமைச்சும், அத்துமறி வருகின்ற மீனவர்களுடைய செயற்பாடு விடயமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று.

நாங்கள் பல தடவை எமது அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் கோரிக்கைகள் விடுத்திருக்கின்றோம், கடிதங்கள் அனுப்பி இருக்கின்றோம், எச்சரிக்கைகள் விடுத்திருக்கின்றோம். ஆனால் எதற்குமே யாரும் மசிந்ததில்லை. இன்னும் இந்திய அரசாங்கம் தங்களுடைய அத்துமீறிய தொழிலை முடுக்கி விடுவது போல தான் எங்களுக்கு தெரிகின்றது.

அந்த வகையிலே இங்கே எமது கடற்பரப்பிலே களவாட வந்தவர்களை கைது செய்தது குற்றம், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். எக்காரணம் கொண்டும் அவர்கள் விடுதலை செய்யப்படக்கூடாது. அவர்கள் சட்டப்படி தான் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

எமது நாடு ஒரு இறைமை உள்ள நாடு. எமது இறைமையையும் சுதந்திரத்தையும் யாரும் பறித்தெடுக்க முடியாது. அந்த வகையிலே அத்துமீறி வந்து எமது வளங்களை களவாடியவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானது. ஆனால் அந்தத் தண்டனை போதாது. தற்போது ஒருவருடம் தண்டனை வழங்கப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் வருவார்களானால் அவர்களுக்கு ஐந்து வருடங்கள் அல்லது 10 வருடங்களாவது சிறை தண்டை வழங்கினால் தான் இவர்கள் ஒரு நிலைப்பாட்டிற்கு வருவார்கள் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *