கடந்த அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தினாலேயே பாரத தேச இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த முடியும் – அங்கஜன் தெரிவிப்பு

நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டு வரப்பட்ட இழுவைப்படகுகள் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்துவதன் ஊடாகவே இழுவைப் படகுகளின் வருகையினை முற்றுமுழுதாக கட்டுப்படுத்த முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார் 

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட இழுவைப்படகுகள் தொடர்பான சட்டத்தினை அமுல் படுத்துவதன் ஊடாகவே இழுவைபடகுகளின் வருகையினை முற்றாகக் கட்டுப்படுத்தலாம் என்று இன்றைய(27) செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார் 

அவர் செய்தியாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்ததாவது,  

நான் எப்போதும் எமது மீனவர்களுக்கு ஆதரவாக இருப்பேன். இழுவைப்படகுகள் நாட்டின் கடல் வளத்தினை அழிப்பது தொடர்பாகவும் அதன் எதிர்கால தாக்கம் தொடர்பாகவும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல ஆய்வாளர்களினால் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்துவதனை நோக்காக கொண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் பா.உறுப்பினர் சுமந்திரனால் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆயினும் அன்றும் அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இன்னமும் காலம் தாழ்த்தும் செயற்பாடுகளே நடைபெறுகின்றதே தவிர இன்றுவரை அச் சட்டம் அமுல்ப்படுத்தப்படவில்லை.

அதே நேரத்தில் எமது தரப்பிலும் அரசியல் செல்வாக்குடன் இழுவைமடிப் படகுத் தொழில் செய்பவர்கள் இருக்கின்றார்கள். இதைப் பற்றி நான் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்துக்களைப் பதிவிடும் போது அரசியல்வாதி ஒருவர் தமக்குச் சார்பான கடற்றொழில் அமைப்புக்கள் சிலவற்றினைத் தூண்டி எமக்கும் அவர்களுக்கும் சண்டையினை மூட்டி விடுகின்ற செயற்பாடுகளைச் செய்கின்றார். இங்கு இருக்கின்ற இழுவைமடி படகுகளுக்கு குறிப்பிட்ட ஒரு கடல் பிரதேசத்தினை ஒதுக்குவதன் ஊடாகவும் அல்லது முற்றாக இலங்கையில் இழுவைப் படகுத் தொழிலை நிறுத்துவதன் ஊடாகவும் மாத்திரமே எமது கடற்பரப்புக்குள் பாரததேச இழுவைப்படகுகள் வருவதை முற்றாகத் தடுக்கமுடியும் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *