சூடு பிடிக்கவுள்ள தேர்தல் களம்…! புதிய வியூகங்களுடன் ஐ.தே.கவின் தேர்தல் பிரச்சாரம் நாளை…!

நிதர்சனம்” (Reality) எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரத்தின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை(10) குளியாபிட்டிய மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதாக அரச உயர்பீடத்தினரிடமிருந்து பல்வேறு அறிவிப்புக்கள் வெளியாகியுள்ள நிலையில் பொதுஜன பெரமுன உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகின்றன.
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் தங்கியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பினார்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் பசில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில் பங்கேற்கும் முதலாவது பொதுக்கூட்டம் நாளை இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
தற்போது கட்சி சார்பற்ற ஜனாதிபதியாக ரணில் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அகிலவிராஜ் காரியவசம், ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்காலத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் எனவும்  அகிலவிராஜ் காரியவசம்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *