இலங்கைப் பெண்ணிடம் பிள்ளையை கொடுத்துவிட்டு பறக்க முயன்ற சீன தாய்..! – கட்டுநாயக்கவில் நடந்த சம்பவம்

தனது மகளை இதுவரை பராமரித்து வந்த இலங்கைப் பணிப்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு நாட்டைவிட்டு தப்பி செல்ல முயன்ற சீனப் பெண்  கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார்.   

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

35 வயதுடைய குறித்த  சீன பெண், தனது 58 வயது தாயுடன் துபாயில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இவர் ஒரு சீன பிரபல நடனப் பெண் எனவும், அவருக்கு 3 வயது மற்றும் 6 மாதமுடைய இரண்டு  மகள்மார்கள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் . 

குருநாகல்  பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய  இலங்கைப் பெண்,  துபாயில் உள்ள சீனப் பெண்ணின் வீட்டில் தொழில் புரிந்துள்ளதுடன், அவரது பிள்ளைகளையும் பராமரித்து வந்துள்ளார். 

இவர் தனது சேவையை முடித்துக் கொண்டு அண்மையில் இலங்கை திரும்பியுள்ளார். 

இந்நிலையில் குறித்த சீன பெண், இலங்கைப் பெண்ணிடம் தொடர்புகொண்டு, தான் இலங்கைக்கு விஜயம் செய்யவதாகவும், அவர்களை அழைத்துச் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருமாறும் கூறியுள்ளார். 

இந்த சீனப் பெண், அவரது தாய்,   இளைய மகள் அனைவரும்  துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில்,  இலங்கை பணி பெண் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து இந்த சீனப் பெண், தனது இளைய மகளை இலங்கை பணிப்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு விமான நிலையத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சீன பெண்ணையும் அவரது தாயையும் கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இவர்கனை  நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *