கொள்ளை அடிக்காமல் இருந்திருந்தால் மகிந்தவே சிறந்த தலைவர்! பொன்சேகா

கொள்ளை அடிக்காமல், குடும்ப அரசியலுக்கு இடமளிக்காமல் இருந்திருந்தால் இலங்கை அரசியலில் அண்மைகாலத்தில் உருவான சிறந்த தலைவராக மகிந்த ராஜபக்ச இருந்திருப்பார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“மகிந்த ராஜபக்ச எனக்குப் பல கெடுதல்களைச் செய்தார். எனக்கு எதிராக கீழ்த்தரமான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். 

ஆனால், நாடாளுமன்றத்தில் இன்று கண்டாலும் வணக்கம் சொல்லும் வழமை உள்ளது. 

ஒரு காலகட்டத்தில் அவர் எனது தலைவராக இருந்தார். அவரிடம் கீழ்த்தரமான பழக்கங்கள் இருப்பதுபோல் நல்ல பழக்கங்களும் உள்ளன.

கொள்ளை அடிக்காமல், குடும்ப அரசியல் செய்யாமல் இருந்திருந்தால் இலங்கை அரசியலில் அண்மைய காலத்தில் உருவான சிறந்த தலைவராக அவர் இருந்திருப்பார் என நான் நம்புகின்றேன்.

இவ்வாறு நான் கூறுவதால் மகிந்த பக்கம் சாயப் போகின்றேன் என நினைக்க வேண்டாம். ராஜபக்சக்களுடன் இனி அரசியல் பயணம் கிடையாது.

அதேபோல் ரணிலையும் மதிக்கின்றேன். அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார்.

சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்பது குடும்பச் சொத்து கிடையாது. நான் எனது ஆதரவாளர்களுடன் இருக்கின்றேன். எனக்கு வாக்களித்த மக்கள் பக்கம் நிற்கின்றேன் என தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *