வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினத்தில் கைதானவர்களை விடுவிக்குமாறு கோரி வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு தெரிவித்த வர்த்தகர்கள்…!

சிவராத்திரி தினத்தன்று நெடுக்குநாறிமலையில் வழிபாடுகளில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 8 பேரையும் உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்ட்ட நிலையில் நெடுங்கேணி நகரில் கடைகளை பூட்டி குறித்த போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று இடம்பெற்ற வழிபாட்டில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி வவுனியாவில் எதிர்ப்பு போராட்ட பேரணியொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டமானது, இன்று காலை நெடுங்கேணி சந்தியில் ஆரம்பமாகி பேரணியாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தை அடைந்து அங்கு மகஜர் கையளிக்கப்பட்டதுடன் அங்கிருந்து நெடுங்கேணி பொலிஸ் நிலையம் நோக்கி சென்று  பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில்  மதத் தலைவர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளதுடன் வவுனியா நெடுங்கேணி பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களை பூட்டி மக்கள் தமது ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *