இந்திய சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள்…! குடும்பத்தினர் விடுத்த கோரிக்கை…!

படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்திய கடற்பரப்பில் கரையொதுங்கிய இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த வருடம் தலைமன்னார் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற தலைமன்னார் கிராமம் பகுதியை சேர்ந்த இரு கடற்றொழிலாளர்கள் பயணித்த படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்திய கடற்பகுதியில் சிக்கிய நிலையில் இந்திய மீனவர்களால் மீட்கப்பட்டு தமிழக கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இந்திய கடலோர காவற்படை மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கும் முன்னர் இரு கடற்றொழிலாளர்களும் இயந்திர கோளாறால் கரை ஒதுங்கியதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இருப்பினும் விடுதலை செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இரு கடற்றொழிலாளர்களும் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் தற்போது சிறப்பு முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளதாக இரு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்கள் எமது பகுதியில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டு எமது வளங்களை அழிக்கும் போது கைதாகும் போது எமது மக்களும், அரசாங்கமும் நல்லெண்ண அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யும் போது , இந்திய அரசாங்கம் மாத்திரம் இவர்களை சிறையில் பல மாதங்கள் வைத்திருப்பதும்,  சிறையில் இருந்து விடுதலையான பின்னரும் சிறப்பு முகாம்களில் வைத்திருப்பதும் தங்களுக்கு மன வேதனை அளிப்பதாகவும் இரு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் குறித்த இரு கடற்றொழிலாளர்களையும் இலங்கைக்கு அழைத்து வந்து தம்மிடம் ஒப்படைக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடற்றொழில் அமைச்சர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் வினவிய போது,

குறித்த விடயம் தொடர்பில் தன்னிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் தான் இந்திய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும்இ அதேநேரம் இந்திய சிறைச்சாலைகளில் உள்ள மீனவர்கள் விடுதலை தொடர்பிலும் அங்கு கையகப்படுத்தப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பிலும் தான் தொடர்ந்து பேசி கொண்டிருப்பதாகவும் விரைவில் இரு மீனவர்களையும் நாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை இடம்பெறும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *