அரச நிறுவனங்களால் ஒதுக்கப்படும் உள்ளூர் கலைஞர்கள் …! ஆளுநரிடம் உதவி கோரும் படக்குழு …!தொடரும் இழுத்தடிப்புக்கள்…!

யாழிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளால் உள்ளூர் கலைஞர்கள் உருவாக்கியுள்ள திரைப்படத்தை வெளியிடுவதற்கு  தடையேற்படுத்தப்பட்டுள்ளதாக படக்குழுவினர் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் படக்குழுவினர் மேலும் தெரிவிக்கையில்,

வழமையாக யாழ் மாநகர சபையால் உள்ளூர் கலைஞர்களை  கொண்டு  உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை செய்யப்பட்டு வருகின்றது.

அதாவது விநியோகஸ்தர்கள் இன்றி குறித்த கலைஞர்கள் தாமாகவே திரையரங்குகளில் குறித்த படத்தை திரையிடுவதற்கு வரிவிலக்கு செய்யப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் யாழில்  வெளிவந்த உள்ளூர் கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட திரைப்படமொன்றுக்கு வரிவிலக்கு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் எமது OTP திரைப்படத்திற்கு வரிவிலக்கு செய்யுமாறு யாழ் மாநகர சபையிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை மாநகர சபையால் எமக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

பணபலமோ அரசியல்பலமோ இன்றி எமது யூடியூப் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்தே குறித்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

குறித்த திரைப்படம் முழுவதும் யாழ்ப்பாண கலைஞர்களை வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் வரிவிலக்கு அளிக்குமாறு நாம் விடுத்த கோரிக்கைகள் தட்டிக்கழிக்கபட்டு வருகின்றது.

வரிவிலக்கு தொடர்பில்  கடந்த வாரம் யாழ் மாநகர சபையிடம் கடிதமொன்றை கையளித்திருந்தோம். அதன்பின்னர் தொடர்ச்சியாக மாநகர சபையினரிடம் வரிவிலக்கு தொடர்பில் தொலைபேசியில் கலந்துரையாடிய போது எமது கடிதம் தங்களுக்கு கிடைக்கவில்லை என பதிலளித்தார்கள்.

அதேவேளை, இதற்கு முன்னர் யாழில் வெளிவந்த திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதை போன்று எமக்கும் வரி விலக்கு அளிக்குமாறு கேட்ட போது,  இதை பற்றி நீங்கள் கதைக்ககூடாது என கடுந்தொனியில்  பதிலளித்திருந்தார்கள்.

இது தொடர்பில் வடமாகாண ஆளுநரை சந்திப்பதற்கு பல தடவைகள் முயன்றும் இன்றுவரை அவரை சந்திக்க முடியவில்லை.

எமது திரைப்படத்திற்கான கட்டணமாக 500 ரூபாவை அறவிடுவதற்கே நாம் திட்டமிட்டிருந்தோம். 

ஏற்கனவே மற்றைய தரப்பினர்கள் அதிக கட்டணத்துடன் திரைப்படங்களை திரையிட்ட நிலையில், எமது கலைஞர்களின் திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் எனும் நோக்கிலேயே குறைந்த கட்டணத்தை அறவிட தீர்மானித்திருந்தோம்.

குறிப்பாக அவர்கள் அறவிடும் வரியின் படி கணக்கிட்டால் , ஒரு காட்சி திரையிடுவதற்கு 18 ஆயிரம் ரூபா வரி செலுத்தவேண்டும்.  குறித்த வரியானது டிக்கட் விற்பதற்கு முன்பாகவே செலுத்த வேண்டும். அதைவிட ஏனைய செலவுகளையும் சேர்த்து எமது திரைப்படத்தின் ஒரு காட்சியை திரையிட கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபா வரை செலுத்த வேண்டியுள்ளது.

இது எமக்கு பெரும் தடையாக காணப்படுவதுடன் இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட மற்றைய தரப்பினருக்கு வரி விலக்கு செய்யப்பட்ட நிலையில் எமக்கு அதனை செய்ய பின்னடிப்பது எம்மை ஓரம் கட்டும் செயலாகவே இதனை பார்க்கின்றோம்.

அதேவேளை வரிச்சலுகை தொடர்பில் நாம் விடுத்த கோரிக்கைகளை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு அனைவரும் உதவவேண்டும்.

உயர்மட்ட அதிகாரிகளுக்கு எமது கோரிக்கைகள் உரியவாறு சென்றடையவில்லை. அவர்களிடம் எமது கோரிக்கைகள் கொண்டு செல்வதற்கு பல்வேறு தடைகளை எதிர்கொண்டுள்ளோம்.

எனவே உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு எமது கோரிக்கைகளை கொண்டு செல்வதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்வதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *