தோட்டப்புற பாடசாலைகளுக்கு விரைவில் 2,535 ஆசிரியர்கள்! கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான 2,535 ஆசிரியர் உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த சில வாரங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மே மாதத்திற்குள், குறித்த பதவி வெற்றிடத்திற்காக ஆட்சேர்ப்பு செய்து, அவர்களுக்கு அடிப்படை பயிற்சிகளை வழங்கிய பின், பாடசாலைகளுக்கு அனுப்ப எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பெருந்தோட்டப் பாடசாலைகளில் இன்னமும் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், கல்வியற் கல்லூரிகளிலும் தகுதி பெறும் மாணவர்கள் மிகக்குறைவு எனவும், 

பட்டதாரிகள் ஒரு சிலரே இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கு தீர்வாக தற்போது ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆசிரியர் சேவை அரசியலமைப்பின் படி, தகைமையுடைய ஐநூறு ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சுக்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும், மூன்று வருடங்களுக்குள் ஆசிரியர் மையங்கள் ஊடாக டிப்ளோமா மட்டத்தில் பயிற்சியளிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், நிலையான தீர்வுகளை வழங்குவது சவாலாக இருக்கும் போது, ​​மாற்றுத் தீர்வுகள் மூலம் கல்வி முறையைத் தொடர வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *