திருமலையில் புதையல் வேட்டையில் ஈடுபட்ட 13 பேர் கைது…!

திருமலையில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு(11)  13 பேரை  சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் ரத்னபுர, கேகாலை மற்றும் தெவனிபியவர பகுதிகளில் வசித்து வரும் 21 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 13 பேரில் நான்கு பேர் மொரவெவ பொலிஸ் பிரிவில் வசித்து வருபவர்கள் எனவும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் பெண்ணொருவர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, வாட்ஸ்அப் மூலமாக புதையல் தொடர்பில் புகைப்படங்கள் பரிமாரப்பட்டமையும் தெரிய வந்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் தனித்தனியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply