வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்..!!

நோர்த் சீ எனப்படும் வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம்  மாலை இடம்பெற்றது. 

கடற்றொழில் அமைச்சினால் செயற்படுத்தப்படுகின்ற நிறுவனங்களில் ஒன்றான வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை சீராக முன்னெடுத்து, குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வலை உற்பத்தி செயற்பாடுகளை மேலும் விஸ்தரித்தல் மற்றும் இலாபத்தை ஈட்டும் வகையிலான பொறிமுறைகளை தயாரித்தல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

முன்பதாக கடந்த காலத்தில் இந்த நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் பாகுபாடுகள் இருந்தமையால் நிறுவனத்தின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது. அத்துடன் ஊழியர்கள் துறைசார் தேவைக்கேற்ப நியமிக்கப்படாத நிலையும் இருந்துள்ளது. அதேவேளை  வேலைத்திட்டம் நடைபெற்றதற்கான ஆவணங்கள் முழுமையாக காணப்படாத முழுமையாக செயலற்றுப்போன நிலை இருந்தது.

அத்துடன் புதிய நிர்வாகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதனூடாகவே நேர்மையான உழைப்பை உருவாக்கிக்கொள்ள முடியும் என நிறுவனத்தின் நலன்விரும்பிகள் அமைச்சரிடம் வலியுறுத்தி வந்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் நிலைமைகளை முழுமையாக அவதானத்தில் கொண்ட அமைச்சர், செயற்றிறனற்ற நிர்வாகத்தினரது நடவடிக்கைகளால் பாரிய நட்டத்தில் இருந்த குறித்த நிறுவனத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் துரித மாற்றத்தை கொண்டுவந்திருந்திருந்தார்.

அத்துடன் தனது பொறுப்பில் உள்ள  நிறுவனங்களில் ஊழியர்கள் அனைவரும் பாகுபாடு அற்ற வகையில் ஒற்றுமையுடன் பணியாற்றி சிறப்பான சேவையை வழங்கவேண்டும் என்றும் அனைவரது ஒருமித்த உழைப்பினூடாகவே நிறுவனங்கள் முன்னெடுக்கும் பணிகளின் இலக்கை எட்ட முடியும் எனவும் குறித்த ஊழியர்களிடம் வலியுறுத்தியிருந்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் குறித்த நடவடிக்கைகளை அடுத்து குறித்த நிறுவனம் தற்போது சிறப்பான நிலையில் இயங்குவதுடன் உற்பத்திகளூடாக இலாபமீட்டும் நிறுவனமாகவும் வளர்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *