இன்று அதிகூடிய வெப்பம்..! வெளி நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் வட மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேற்கு கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை,  நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (22) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகரிக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், நிழலான இடங்களில் இயன்றவரை ஓய்வெடுத்தல், வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *