ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் பொன்னாலையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
பொன்னாலை வெண்கரம் இலவச படிப்பகத்தில் இன்று மாலை ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான ந. பொன்ராசா தலைமையில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பொழுது ஒரு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டு ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகை சுடரும் ஏற்றி வைக்கப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மிக நெருக்கடியான காலங்களில் துணிச்சலாக ஊடக பணியை ஆற்றிவந்தவர்களில் மறைந்த ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனும் முக்கியமானவராக இருந்திருந்தார்.
குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தின் பொழுது யாழ் குடாநாட்டிற்கான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவ கட்டுபாட்டிற்குள் தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியராக கடமையாற்றி கள நிலைமைகளை ஊடகங்களின் வாயிலாக வெளிக்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் நினைவேந்தல் நிகழ்வில் ஊடகவியலாளர் பொன்ராசா ,வெண்கரம் படிப்பகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் , ஊடகவியலாளர் ரூபனின் உறவினர்கள் ,பொன்னாலை பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.