புத்தளத்திற்கு பதில் காழி நீதிபதி நியமனம்…!

புத்தளம் பதில் காழி நீதிமன்ற நீதிபதியாக , நீர்கொழும்பு காழி நீதிமன்ற நீதிபதி அஷ்ஷெய்க் எம்.எம்.முஹாஜிரீன் (இஹ்ஸானி) நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

5000 ரூபாவை இலஞ்சமாக பெற முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில் புத்தளம் காழி நீதிமன்ற நீதிபதி , இலஞ்ச ஒழிப்பு, ஊழல் அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், புத்தளம் காழி நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நீர்கொழும்பு பகுதிக்குப் பொறுப்பான காழி நீதிபதி, புத்தளம் பதில் காழி நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், புத்தளம் காழி நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்குகளின்  கோவைகள் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக ஒப்படைக்கப்பட்டதன் பின்னரே , வழக்கு நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என புத்தளம் பதில் காழி நீதிபதி அஷ்ஷெய்க் எம்.எம்.முஹாஜிரீன் (இஹ்ஸானி) தெரிவித்தார்.

இதுபற்றி நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர கூறினார். 

எனினும், பழைய வழக்குகளின் கோவைகள் முறையாக கிடைக்க காலம் எடுக்கும் பட்சத்தில், புதிய வழக்குகளை பொறுப்பெடுத்து புத்தளம் காழி நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் புத்தளம் பதில் காழி நீதிபதி அஷ்ஷெய்க் எம்.எம்.முஹாஜிரீன் (இஹ்ஸானி) மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *