முள்ளிவாய்க்கால் கஞ்சியை மன்னாரில் ஆர்வத்துடன் பருகிய சிங்கள மக்கள்…!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி  வழங்கும் நிகழ்வு இன்றையதினம்(11)  காலை மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்துக்கு முன்பாக இடம் பெற்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு  முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது அங்கு நின்ற மக்களின் உயிர்காத்த உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காணப்பட்ட நிலையில், இன்றைய தலைமுறையினருக்கு முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை கடத்தும் விதமாக மன்னார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மன்னார் மாவட்டத்தில் யுத்த காலத்தில் தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், ஆயுத படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் உறவினர்கள் இணைந்து மன்னார் பள்ளிமுனை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளிமுனை பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள் உட்பட அதிகளவான மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தி சென்றனர் 

அதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய சமயம் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட சிங்கள மக்களும் முள்ளிவாய்கால் கஞ்சியை ஆர்வத்துடன் அருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *