கிளிநொச்சி குளத்தில் கலக்கப்படும் நகர்ப்புற கழிவுகள்…!மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்…!

குடிநீருக்காக நீர்பெறும் கிளிநொச்சி குளம் மாசுபடுவது உறுதியெனில் பொதுநல வழக்கு தொடர வேண்டும் என கூறப்பட்ட நிலையில் மாற்று இடத்தை அடையாளம் காண தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் இன்று நீண்ட நேரம் கவனம் செலுத்தப்பட்டது.

கிளிநொச்சி மக்களிற்கான குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக இரணைமடு குளத்திலிருந்து கிளிநொச்சி குளத்திற்கு நீர் பெறப்பட்டு சுத்திகரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கிளிநொச்சி குளத்தில் வைத்தியசாலை கழிவுகள், இராணுவ முகாம் மற்றும் நகர்ப்புற கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் சுத்தமான குடிநீரை சுத்திகரிப்பதில் சிக்கல் காணப்படுவதாக சம்மந்தப்பட்ட சபையால் வழங்கப்பட்ட தகவலை இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் சபையில் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை. தவநாதனும் குறிப்பிடுகையில், நீரை சுத்திகரிக்க முடியாமையால் அதிக குளோரின் பாவிக்கப்படுவதை உணர முடிவதாகவும், அதன் தன்மை அதிகமாக காணப்படுவதை காண்பதாகவும் தெரிவித்தார்.

இன்று குளியளறை பயன்பாட்டில் இந்த விடயத்தை தானும் அவதானித்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தெரிவித்தார்.

மக்களுக்கு குடிநீர் வழங்கும் பகுதியில் இவ்வாறான கழிவுகள் கலப்பது தொடர்பில் உண்மை இருப்பின், இதுவரை மக்கள் பயன்படுத்திய குடிநீர் தொடர்பில் பொதுநல வழக்கு தொடர வேண்டும் என முத்து சிவமோகன் சபையில் தெரிவித்தார்.

குறித்த விடயம் பாரதூரமான விடயம் என்பதால் மாற்று இடம் ஒன்றை அடையாளம் கண்டு அங்கிருந்து நீரை பெற வேண்டும் எனவும், ஜனாதிபதி கிளிநொச்சிக்கு வரவுள்ள நிலையில் அந்த திட்டத்திற்காக நிதியை பெறுவது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சரையும் அழைத்து கலந்துரையாடுவோம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், பொதுநல வழக்கு தொடர்பிலும் சிவமோகன் தெரிவித்துள்ள நிலையில், கிளிநொச்சி குளத்தையும் பாதுகாக்காமல் மாசுபட விடவும் விட முடியாது என தெரிவித்த அமைச்சர், சுத்தமான குடிநீரை வழங்கக் கூடிய பகுதியை அடையாளம் கண்டு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், இலங்கையில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உயரிய சுத்திகரிப்பு நிலையம் கிளிநொச்சியில் அமைந்துள்ளதாக நீர்வழங்கல் சபை பொறியியலாளர் தெரிவித்தார்.

ஆனாலும், கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பகுதிக்குமான குடிநீரை வழங்க போதுமானதாக இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *