கண்டி நகரில் கடும் மழை – வெள்ளத்தில் முழ்கிய ரயில் நிலையம்..!

 

கண்டி நகரில் நேற்று பெய்த கடும் மழையினால், கண்டி ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.

ரயில் நிலையத்தை அண்மித்துள்ள முறையற்ற வடிகால் கட்டமைப்பு மற்றும் வடிகால்கள் மூடப்பட்டமையே, ரயில் நிலையம் நீரில் மூழ்க காரணம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கண்டி நகரில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி ஒரே நேரத்தில் பெய்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இதையடுத்து, போகம்பரவிற்கு பின்புறமாகவுள்ள மலை பகுதியிலிருந்து பெருமளவான வெள்ள நீர், ரயில் நிலையத்தை நோக்கி பெருக்கெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தற்காலிகமாக மூடப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் பூரண கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன் குறித்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்றும் (17) மழை பெய்தால் இந்த வீதி மீண்டும் ஆபத்தானதாக மாறக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அப்படியானால், எந்த நேரத்திலும் சம்பந்தப்பட்ட வீதியை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *