கிளிநொச்சியில் விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையம் ஜனாதிபதியால் நாளை திறப்பு!

கிளிநொச்சியில் வட மாகாணத்திற்கான விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மருத்துவமனை நாளை அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. 

நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் கட்டிடங்கள், மருத்துவ உபகரணங்களுடன் இணைத்து சுமார் 2653701264.34 ரூபா நிதி ஒதுக்கீட்டில்  அமைக்கப்பட்ட இவ் மருத்துவமனையில் பெண் நோயியல் பிரிவு, மகப் பேற்றியல் பிரிவு,  மகப் பேற்றியல் விடுதி, செயற்கைக் கருத்தரிப்பு ஆய்வு கூடம், குழந்தைகளுக்கான விசேட பராமரிப்பு பிரிவு, சத்திர சிகிச்சைக்கூடம், அதி தீவிர சிகிச்சை பிரிவு, மத்திய தொற்று நீக்கல் சேவை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் கதிரியக்க நோய் நிர்ணயப் பிரிவுகள் அடங்கிய அனைத்து வசதிகளுடன் கூடிய  விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மருத்துவமனை நாளை திறக்கப்படவுள்ளது.

இவ் விசேட மகப்பேற்று பெண்ணோயியல்  மருத்துவமனை கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்படுகின்ற போது  அது வடக்கிற்கான  விசேட மையமாக மட்டுமன்றி இலங்கையில் உள்ள பெண்ணோயியல் மருத்துவமனைகளோடு ஒப்பிடும் போது அதி நவீன வசதிகளுடன் கூடிய  ஒரு விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையமாகக் காணப்படும். குறிப்பாக செயற்கை முறை கருத்தரித்தல் வசதிகள் உள்ளிட்ட பல நவீன மருத்துவ வசதிகள் கொண்ட ஒரு நிலையமாக இது  அமைக்கப்பட்டுள்ளது.

இவ் வைத்தியசாலைக்கான திட்ட முன்மொழிவானது தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டலின் படி  கிளிநொச்சி வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான வரைபினுள் உள்வாங்கப்பட்டு  கிளிநொச்சி  பிராந்திய சுகாதார திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட குறித்த திட்டம் நெதர்லாந்து அரசு  நிதி வழங்கி இந்த விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையத்தை அமைத்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *