வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணிப் பத்திரங்கள்…! உரித்து வேலைத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை…! வடமாகாண ஆளுநர் உறுதி…!

வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணிப் பத்திரங்களின் உரிமையாளர்களையும் உரித்து வேலைத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர்  பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கான 5400 காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம்(26)  வவுனியாவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

காணி பத்திரங்களை மீண்டும் பிரதேச செயலாளர்களிடம் வழங்கி தங்களுக்கான உறுதிகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை தொடர்பில் அறியக்கிடைத்துள்ளது.

அதேவேளை, காணி பத்திரம் கைமாற்றப்பட்டுள்ளமை, சீதனமாக வழங்கியுள்ளமை, வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ளமை போன்ற காரணங்களால், பலருக்கு உரித்து திட்டத்தின் கீழ் காணி உறுதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

எனினும் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணி பத்திரங்கள் தொடர்பில் கலந்துரையாடி ஜனாதிபதி உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பார்.

எனவே, ஜனாதிபதியின் கனவு திட்டமான உரித்து வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் இதன்போது ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *