முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியை ஆக்கிரமித்துள்ள தனியார் நிறுவனம்…! போராட்டத்தில் குதித்த கடற்றொழிலாளர்கள்…!

சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்க கோரியும் வீதி மறிக்கப்பட்டதை கண்டித்தும் தியோநகர் மீனவர்கள் நேற்றையதினம்(26) இரவில் இருந்து தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு கரையோர கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிராதான வீதியினையும், கடற்கரையினையும் இணைக்கும் இணைப்பு வீதியானது சில  தரப்பினரால் மறித்து வேலி இடப்பட்டுள்ளது.

குறித்த  வீதியூடாக மீனவர்கள் மீன்பிடிக்கு செல்ல முற்பட்ட நிலையில் குறித்த  வீதியானது வேலி அடைக்கப்பட்டு கற்கள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில்,  தியோ நகர் மக்கள் ஒன்று கூடி குறித்த வீதித்தடைகள், வேலிகளை அகற்றியுள்ளனர்.

 இது குறித்து குறித்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த பகுதியில் சுற்றுலாத்தளம் ஒன்றினை அமைத்துள்ள தனியார்  நிறுவனம் ஒன்று தொடர்ச்சியாக மீனவர்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், தமது வளங்களை சுரண்டி வருகின்றனர்.

அதேவேளை, தமது  மீன்பிடிப்படகுகள், வலைகளை உள்ளே வைத்தே வேலைக்கு செல்லும்  பாதையினை அடைத்ததாகவும், கரையோரத்தில் மீன்பிடிப்பதற்கு சுதந்திரமாக விடுவதில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இது தொடர்பில் அதிகாரிகளுக்கு முறையிட்டும் பயன் கிடைக்கவில்லை என்றும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசாரும் உரிய முறையில் தீர்வினை வழங்கவில்லை என்றும் தமக்கான நிரந்தரத்தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் குறித்த இடத்தில் ஈடுபடப்போவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று மக்களது பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *