குவைத்தில் மர்மமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் – உறவினர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை

 

குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியுமாறு உறவினர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீகிரிய, இலுக்வல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதான டபிள்யூ. ஜி. தனுஜக சந்தருவன் பண்டார என்ற   இளைஞன் குவைத்திற்கு தொழிலுக்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் குவைத்தில் உள்ள வீடொன்றுக்கு சாரதியாக வேலைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த சந்தருவானின் சகோதரியான ஷஷினி மல்சானிக்கு, கடந்த 20 ஆம் திகதி தனது சகோதரர் வாகன விபத்தில் காயமடைந்துள்ளதாக அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் சந்தருவானின் மரணம் தொடர்பிலான விசாரணையின் போது, ​​அவர் உயிர்மாய்த்துக் கொண்டதாக அவர் பணிபுரிந்த வீட்டு உரிமையாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் களஞ்சிய அறையொன்றில் அவர் உயிர்மாய்த்துக் கொண்டதாக சிறிய காணொளி ஒன்று வாட்ஸ் அப் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரை மாய்த்துக்கொள்ளும்  அளவிற்கு சந்தருவானுக்கு பிரச்சினை இல்லாத காரணத்தால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மரணத்திற்கான காரணத்தை கண்டறியுமாறு உறவினர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, சந்தருவானின் தாயாரும் குவைத்தின் வேறொரு பகுதிக்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளதாகவும் அவரும்   இலங்கை திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *