அநீதியான வேலைநிறுத்தங்களால் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ள பிள்ளைகள் – இராஜாங்க அமைச்சர் குற்றச்சாட்டு

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அநீதியான வகையில் வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இவ்வாறு  தெரிவித்தார்.

தற்போதைய தொழில்சார் நடவடிக்கைகளின்படி அனைத்து அரச ஊழியர்களுக்கும் 20,000 ரூபா கொடுப்பனவு கோரப்பட்டுள்ளது. 

அந்த கொடுப்பனவை வழங்குவதற்கு வருடத்திற்கு சுமார் 280 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும். 

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு அந்த செலவுகளை எவ்வாறு ஈடுகட்டுவது என்பதை எதிர்க்கட்சி தெரிவிக்க வேண்டும்.

அத்துடன், தேர்தல் நெருங்கும் வேளையில் அசாதாரண வகையில் போராட்டங்களை முன்னெடுத்தமையினால், பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பையும் இழந்துள்ளனர். 

இறுதியில் சாதாரண பொது மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்பதை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் போராட்டங்கள் மூலம் மக்களின் நிவாரண வாழ்வாதாரத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றனரா என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகள் பதில் அளிக்க வேண்டும் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *